Friday, November 11, 2011

எஸ்.பொன்னையா நாடார்

 சிவசுப்பிரமணிய நாடாரின் புதல்வராக எஸ்.பொன்னையா நாடார் 1861 இல் பிறந்தார். ஆறுமுகநேரிக்கு சாலை வசதி திருநெல்வேலி-திருச்செந்தூர் இரயில் வசதி ஆகியவற்றை முதலாவதாகக் கொண்டு வந்த ”பொன்னான மாமனிதர்” இவரே. கூர்மதியும் ஆங்கிலப் புலமையும் மிக்கவர். தம்முடைய திறனால் பலவேறு திட்டங்களைத் தென்பகுதிக்குக் கொண்டு வந்தார். 23.02.1923 இல் இரயில்வே போக்குவரத்து மேதகு சென்னை கவர்னர் கோஷன் பிரபு அவர்களால் திறந்து வைக்கப்பட்டது. அந்நாளில் காயல்பட்டினம் ஆறுமுகநேரி உப்பு வியாபாாிகள் சார்பில் எஸ்.பி.அவர்களுக்கு தங்க மெடல் பரிசளிக்கப்பட்டது. இவர் ஆற்றிய சேவையின் ஒரு பகுதி.
தலைவர் - காயல்பட்டினம் உப்பு வர்த்தக கம்பெனி. 1883-1903.
தலைவர் - காயல்பட்டினம் யூனியன் 1896-1916
உறுப்பினர் - தாலுகா போர்டு 1896-1933
உறுப்பினர் - ஜில்லா போர்டு 1903-1933
நிர்வாகி - இந்து சரஸ்வதி நடுநிலைப்பள்ளி ஜில்லா கல்விச்சபையின் உறுப்பினராக 12 ஆண்டுகள் கலால் ஆலோசனைக் கமிட்டி தர்மபரிபாலனக் கமிட்டி நிலச்சுவான்தார்கள் சங்கம் என இவர் ஏற்ற பொறுப்புகள் ஏராளம். இவர் வகித்த பதவிகளுக்கு இவரால் பெருமை சோ்ந்தது.திருச்செந்தூர் சன்னதித் தெருவில் உள்ள நாடார் மண்டபம் அடிப்படை மட்டும் போடப்பட்டு கிடந்த வேளையில் முன்னின்று வசூல் செய்து கட்டடத்தைக் கட்டியவர் எஸ்.பி. ஆவார். நாடார் மகாஜன சங்கம் உருவாகிட தென்பகுதியில் இருந்து பிரதிநிதியாகப் பொறாயாறு சென்று கலந்து கொண்டார். தட்சிண(மாற) நாடார் பேட்டைகளில் முன்னாளிலிருந்த இடர்பாடுகளைக் களைந்து வளர்ச்சிக்கு வித்திட்டுள்ளார். ஏரல் சேர்மன் அருணாசல சுவாமியுடன் நட்புக் கொண்டிருந்தார். 24.1.1906 இல் சென்னை வருகை தந்த பிரிட்டிஷ் இளவரசர் திரு.ஜோர்ஜ் அவர்கள் தமிழகத்தில் உள்ள தலைசிறந்த 300 பேர்களுக்கு நேர்முக விருந்து வழங்கினார். அவர்களுள் எஸ்.பி.யும் ஒருவர்.குடிநீர் சாலைவசதி பாசனம் வேளாண்மை கல்வி மருத்துவம் சுகாதாரம் பனைத் தொழிலாளர் நலன் சமுதாயப்பணி என சேவைகள் பல செய்தார்.

1 comment: